ராமஜெயம் கொலை வழக்கு- ஜூன் 1 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது மதுரை ஹைகோர்ட்
மதுரை: மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் 29.3.2012ல் திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளைப் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. இதனால், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது. ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கு அக்டோபர் 28ல் விசாரணைக்கு வந்தபோது, ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. 3 மாதம் அவகாசம் அளித்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரவியிடம் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து லதா மனு மீதான விசாரணையை ஜூன் 1 ஆம் தேதிக்கு நீதிபதி ரவி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications