படிப்பு முக்கியம்: மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை.. குண்டாஸில் கைதான மாணவருக்கு தேர்வெழுத பரோல்!
மதுரை : பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான பொறியியல் மாணவர் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக 20 நாட்கள் பரோல் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மோட்டார் சைக்கிள்களுடன் புகுந்த சில இளைஞர்கள் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியும், கல்லூரி காவலாளியை தாக்கியும் அடாவடி செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இதையடுத்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். இவர்களில் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைதான பொறியியல் மாணவர் ஒருவருக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரண்ணை முடிவில், மனுதாரர் மகன் பொறியியல் பட்டப்படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் ஜூன் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய கட்டணத்தை மனுதாரர் ஏற்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மாணவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பரோல் முடிந்ததும் வரும் ஜூன் 21ஆம் தேதி மனுதாரர் மகன் மதுரை சிறை சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications