ஆடி மாதம்.... மீனாட்சி அன்னைக்கு முளைக்கொட்டு உற்சவம்
மதுரை: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஆடி வீதிகளில் அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடந்தது. அப்போது அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவலிங்கம், காளை வாகனம் பொறிக்கப்பட்ட கொடி தர்ப்பைப்புல் கயிறால் கட்டப்பட்டிருந்தது.
சேத்தியிலிருந்து வைரக் கிரீடம் சார்த்திய மீனாட்சியம்மன் கொடிமரத்தின் முன் வெள்ளிச் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அப்போது சிவாச்சார்யர்களால் பூஜைகள் நடைபெற்றன.
கொடிமரத்தில் நான்கு புறமும் தர்ப்பைப்புல் கட்டப்பட்டு, அம்மனுக்கு உரிய பட்டும் சார்த்தப்பட்டது. பின்னர், புனித நீர் கொடிமரத்தின் கீழ் ஊற்றப்பட்டதும் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், மாலைகள் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டதும், தீபாராதனை நடைபெற்றது.
முதல்நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று ஆடி வெள்ளி, ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் கண்கவரக் காட்சி அளித்தார்.
10ம் தேதி தங்கச் சப்பரத்தில் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை சுவாமி, அம்மன் ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளியதும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அருள்பாலிக்கும் திருக்கயிலாய காட்சி நடைபெறும்.
11ம் தேதி அம்மன் தங்கச் சப்பரத்திலும், 12ம் தேதி புஷ்ப விமானத்திலும்எழுந்தருள்வார். 13ம் தேதி சிறப்பு வழிபாடு மற்றும் வீதியுலாவுடன் முளைக்கொட்டு உற்ஸவ விழா நிறைவுறும். விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஆடி வீதிகளில் அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பது கண்கொள்ளா காட்சியாகும்.