மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
மதுரை: மதுரை ஆற்றுப்பாலத்திலிருந்து குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது ஏ.வி. பாலம். இன்று காலை அந்தப் பாலத்தின் வழியாக முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். திடீரென பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறிய அந்த முதியவர் வைகை ஆற்றினுள் குதித்தார்.
கோடை காலமாகையால், வைகை ஆற்றில் நீர் இல்லை. இதனால், பாலத்திலிருந்து குதித்த முதியவரின் கை மற்றும் கால் எழும்புகள் நொறுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
உடனடியாக இது குறித்து விளக்குத்தூண் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட முதியவர் காமராஜர் சாலையில் உள்ள லட்சுமிபுரம் 8-வது தெருவைச் சேர்ந்த அசோகன் (வயது 65) என தெரிய வந்துள்ளது. அசோகன் அதே பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அசோகனின் தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதேனுமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.