மதுரை ஜெயிலில் களி மட்டும் இல்லை... மட்டன் கறி கூட இருக்கு!
மதுரை: சிறை என்றாலே களிதான் கிடைக்கும் என்று சொன்னது அந்த காலம். இப்போது மதுரை சிறையில் எல்லாம் தலைகீழ். மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கேண்டீனில் சிறை கைதிகளுக்கு 60ரூபாய்க்கு மட்டன் சாப்பாடு விற்பனை செய்யப்படுகிறதாம்.
மதுரையில் உள்ள மத்திய சிறையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 2500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை குற்றச்செயல்களில் இருந்து திருத்தும் வகையில் பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தண்டனை கைதிகள் பலர் சமையல் கலையில் சிறந்தவர்களாக இருப்பதால் சில மாதங்களுக்கு முன்பு சிறை வளாகததில் அவர்களுக்கு கேண்டீன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர சிறை கைதிகளின் பல்வேறு தயாரிப்புகள் வெளியே பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சூடாகவும், சுவையாகவும்
சிறைக் கேண்டீனில் இட்லி, தோசை, வடை, பூரி ஆகியவை மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர காபி, அவித்த முட்டை ஆகியவையும் கூட உள்ளே பாதி விலையில் சுடச் சுட சுவையாக கிடைக்கிறதாம்.

மட்டன் சாப்பாடு
இதில் ஒரு படி மேலே வாரம் ஒரு நாள் மதிய உணவுக்கு மட்டன் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பிளேட் மட்டன் சாப்பாடு ரூ.60-க்கு கிடைக்கிறது. இதுதவிர மற்ற நாட்களில் ரூ.15 விலையில் மட்டன் குருமா விற்கப்படுகிறது.

சந்தோசமா சாப்பிடுறாங்க
கைதிகளே நடத்தும் இந்த கேண்டீன்களில் தரப்படும் மிக குறைந்த விலையில் உணவுகள் தரப்படுவதால் இங்குள்ள கைதிகள் சந்தோசமாக சாப்பிடுகின்றனராம்.

விலை குறைவுதான்
100 கிராம் மட்டன் கிரேவியுடன் ரூ.60-க்கு சாப்பாடு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேண்டீன்களில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் ரூ.15-க்கும், வடை ரூ.3.50-க்கும், காபி ரூ.2.50-க்கும், அவித்த முட்டை ரூ.4.50-க்கும் விற்கப்படுகிறது.

உணவு அட்டை கூட
இந்த கேண்டீன்களில் சாப்பிட கைதிகளுக்கு உணவு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி உணவு பெறும் கைதிகள் தங்களது பணத்தை அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் இருந்து வாங்கி செலுத்துகின்றனராம். இந்த கேண்டீன்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டிருக்குமாம்.

அளவு நிர்ணயம்
இங்கேயும் சீலிங் சிஸ்டம் இருக்கிறது. அதாவது ‘ஏ' வகுப்பு கைதிகள் ரூ.750 வரையிலும், ‘பி' வகுப்பு கைதிகள் ரூ.450 வரையிலும் ஒவ்வொரு வாரமும் உணவு சாப்பிட்டு கொள்ள நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை வார்டன் தெரிவித்துள்ளார்.
அப்போ இனி எல்லோரும் ஜெயில்ல போட்டாலும் மதுரை ஜெயிலா பார்த்து போடுங்க என்று கேட்கப் போகின்றனர்.












Click it and Unblock the Notifications