சரக்கு போதையில் அடிதடி... 'சிவகாசி ஜெயலட்சுமி' வழக்கில் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர், தம்பி பலி
மதுரை: 'சிவகாசி ஜெயலட்சுமி' வழக்கில் சிக்கிய மதுரை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், அவரது தம்பி செல்லச்சாமி ஆகியோர் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியவர் 'சிவகாசி ஜெயலட்சுமி'... போலீஸ் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி. வரை பலரையும் கைக்குள் போட்டுக் கொண்டு மோசடிகளில் ஜெயலட்சுமி ஈடுபட்டதாக புகார் கிளம்பி பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் பல போலீஸ் அதிகாரிகளின் தலைகள் உருண்டன.
இவர்களில் ஒருவர் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வெங்கடாச்சலம். சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டவர் வெங்கடாச்சலம்.
வெங்கடாச்சலம் தனது சகோதரர் செல்லச்சாமியுடன் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டே சொத்து பிரச்சனை குறித்து விவாதித்திருக்கின்றனர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்லச்சாமி உயிரிழந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும்வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.