நான் இல்லைங்க.. தினகரன் தான்.. தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் புகார்!
இரட்டை மின்கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: இரட்டை மின்கம்பம் சின்னத்தை, தான் தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரத்தில் டிடிவி.திகரன்தான் அதிமுக கட்சியையும் சின்னத்தையும் முறைகேடாக பயன்படுத்துவதாக மதுசூதனன் புகார் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதியில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு போட்டி போட்டன.
இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சிப் பெயரையும், அதிமுகவின் கொடியையும் இரு அணியினரும் பயன்படுத்தக்கூறடாது என தடைவிதித்தனர். இதைத்தொடர்ந்து இரு அணியினரும் புதிய சின்னத்தையும் கட்சியையும் தேர்வு செய்ய வேண்டும் உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் இரு அணியினருக்கும் புதிய கட்சிப் பெயரையும் சின்னத்தையும் ஒதுக்கீடு செய்தது.

புதுக்கட்சி, புது சின்னம்
அதன்படி, ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற கட்சிப் பெயரையும் இரட்டை மின்கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது. அதேபோல் சசிகலா தரப்புக்கு அதிமுக அம்மா கட்சி என்ற பெயரையும் தொப்பி சின்னத்தையும் ஒதுக்கியது.

மதுசூதனன் மீது புகார்
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலைச் சின்னம் போலவே பயன்படுத்துவதாக டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் மதுசூதனனுக்கு உத்தரவிட்டது.

தவறாக பயன்படுத்தவில்லை
இதையடுத்து மதுசூதனன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தன் மீதான புகார் தொடர்பாக கடிதம் மூலம் விளக்கமளித்தார். அந்தக் கடிதத்தில் தான் இரட்டை மின் கம்பத்தை தவறாக பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.

டிடிவி.தினகரன்தான்..
மேலும் டிடிவி.தினகரன் தான் இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் பிரச்சாரத்துக்கு முறைகேடாக பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேவைப்பட்டால் தன்மீதான புகார் தொடர்பாக நேரில் வந்து விளக்கமளிக்கவும் தயாராக இருப்பதாகவும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

தீவிர பிரச்சாரம்..
மதுசூதனன் அளித்த இந்த விளக்கக்கடிதத்தை ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனும், பாலாஜி சீனிவாசனும் தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்தனர். இதனிடையே இடைத்தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் இரு கட்சிகளும் தங்களின் புதிய சின்னங்களை மக்களிடையே பதியவைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications