ஆளுநருடன் ஓபிஎஸ் அணி மைத்ரேயன் எம்பி திடீர் சந்திப்பு
யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இன்று ஆளுநரை திடீரென சந்தித்து பேசினார்.
சென்னை: ஆளுநர் வித்யாசகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார்.
முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் சசிகலாவோ தமக்கே அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது; தம்மையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அத்துடன் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா.
மேலும் ஆட்சி அமைக்க தம்மை அழைக்காவிட்டால் பொறுமையாக இருக்க முடியாது என ஆளுநரை மிரட்டி நெருக்கடி கொடுத்து வருகிறார் சசிகலா. இருப்பினும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர உள்ளதால் ஆளுநர் தற்போது எந்த முடிவும் எடுக்காமல் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே ஆளுநர் வித்யாசகர் ராவை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து பேசினார். முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர் மைத்ரேயன். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த தகவல்களை நேரில் தெரிவிக்கவே மைத்ரேயன் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.