கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் கலக்க மக்கள் தேமுதிக முடிவு.. தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை: வி.சி.சந்திரகுமார் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற மக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தங்கள் அமைப்பை, திமுகவோடு இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியோடு, தேமுதிக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக விளங்கிய, வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகிய 3 எம்எல்ஏக்கள், 10 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி, மக்கள் தேமுதிக என ஒரு அமைப்பை தொடங்கினர்.
இதன்பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளைப் பெற்றனர். அதில் முறையே, வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
புதிதாக கட்சியுடன் நெருக்கம் காட்டியவர்களுக்கு தொகுதிகளை வழங்கியதால் அம்மூன்று தொகுதி திமுகவின் நிர்வாகிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தோற்கடிக்க செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந் நிலையில் மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சந்திரகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெரும்பாலானோர், திமுகவோடு தங்கள் அமைப்பை இணைக்க ஆதரவு தெரிவித்தனர். பின்னர், இது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
தனியாக கட்சி நடத்தி வெற்றி பெறுவது என்பது தமிழக அரசியலில் சாத்தியமில்லாத காரியமாகிவிட்டது என்பதையும், கட்சி நடத்த அதிக பணம் தேவைப்படும் என்பதையும் உணர்ந்து 'மக்கள் தேமுதிகவினர்', திமுகவில் இணையும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.