மதுரையை குலுங்க வைத்த மக்கள் நல கூட்டணி மாநாடு.. அச்சத்தில் திமுக, ஆனந்தத்தில் அதிமுக
சென்னை: வைகோ உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அலை பெருகிவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு மதுரையில் அந்த கூட்டணி நடத்திய மாநாட்டுக்கு வந்த மக்கள் கூட்டம் அமைந்தது. இது அதிமுக தரப்பைவிட திமுக தரப்பின் வயிற்றில்தான் புளியை கரைத்துள்ளது.
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டாக விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகிய தலைவர்களைச் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில், ஆனைமலை அடிவாரத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ‘மாற்று அரசியல் எழுச்சி மாநாடு', கடந்த 26ம் தேதி நடந்தது. நான்கு கட்சிகளின் தொண்டர்களும் திரளாக மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
லட்சக்கணக்கான மக்கள்
மாநாட்டுக்கு தலைமையேற்ற வைகோ, ‘‘இங்கே 5 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். இது தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்ட போதிலும், அதிமுகவைவிட திமுகவுக்கே இது அதிர்வலையை அதிகரித்துள்ளதாம்.
எதிர்ப்பு வாக்காளர்கள்
மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் போன்ற மாஸ் தலைவர் இல்லாத போதும், மவுனமாக ஒரு புரட்சி செய்து லட்சக்கணக்கானோரை திரட்டியுள்ளது அக்கூட்டணி தலைவர்களின் சாமர்த்தியம்தான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டோர் அடங்கிய கூட்டம்தான் அது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஆட்சிகள் மாறும்
இதில் திமுகவுக்கு ஏன் அதிர்ச்சி என்பதை சொல்லி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. பொதுவாக, திமுக 5 வருடம் ஆண்டதும், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், அராஜக குற்றச்சாட்டுகளும் வருவதும், அதிமுக ஆட்சி முடியும்போது, அதே போல அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வருவதும் சகஜம்.
காட்சிகள் மாறாது
இதனால், 5 வருடங்களுக்கு ஒருமுறை அதிருப்தி ஓட்டுக்களை கொண்டே அடுத்த கட்சி ஆட்சியை பிடித்துவிடும். மக்களும் மாற்று இல்லை என்று பழைய டயலாக்கையே கூறி, வோட்டுக்களை மாற்றி, மாற்றி போட்டு வந்தனர். இதேபோன்ற ஒரு பலனை இம்முறை திமுக மீண்டும் அறுவடை செய்யும் நோக்கத்தில் இருந்தபோதுதான், மக்கள் நல கூட்டணி அவர்களுக்கு எரிச்சலை உருவாக்கியுள்ளது.
அதிமுகவுக்கு ஆதாயம்
போதாத குறைக்கு, பாஜக, தேமுதிக, பாமக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் உருவாகிவிட்டால், அவ்வளவுதான், சுத்தம். எதிர்ப்பு ஓட்டுகள் நாலாபுறமும் சிதறிப்போய், ஆதரவு வாக்குகள் மட்டும் சிதறாமல் அதிமுகவுக்கு கிடைத்துவிடும்.
லோக்சபா தேர்தல் பாடம்
கடந்த மக்களவை தேர்தலின்போதே இதை கண்கூடாக பார்த்து அவஸ்தைப்பட்டது திமுக. தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளை பிரித்துவிட்டதால், தமிழகம், புதுச்சேரியில், திமுகவால் 40 தொகுதிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால், அதிமுகவோ, தமிழகத்தின் 37 தொகுதிகளை வாரி சுருட்டியது. தேசிய ஜனநாயக கூட்டணியோ 2 இடங்களை தட்டிச்சென்றது.
அதிமுக விஸ்வரூபம்
மக்களவை தேர்தலின்போதும், அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்தது. அப்படியும், 37 தொகுதிகளை வென்று, தேர்தல் முடிவுகளை பொறுத்தளவில், பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே 3வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து காட்டியது அதிமுக.
திமுக பதைபதைப்பு
இதே பார்முலாவை, சட்டசபை தேர்தலிலும் அப்ளையானால், வெற்றி நமதே என நினைக்கிறார் ஜெயலலிதா. எனவே, மக்கள் நல கூட்டணிக்கு கூடிய கூட்டத்தை பார்த்து முதலில் அகம் மகிழ்ந்தவரும் அவராகத்தான் இருக்க முடியும். லோக்சபா தேர்தல் முடிவே, திரும்பி வந்தால், திமுக எதிர்காலம் என்னவாகும் என்ற பதைபதைப்பு அறிவாலய வட்டாரத்தில் அதிகமாக கேட்கிறது.