உடைந்தது மக்கள் நல கூட்டணி.. திருமா அறிவிப்பு! ஆர்.கே.நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் தனித்து போட்டி
ஆர்.கே.நகரில் மக்கள் நல கூட்டணி முறிவடைந்துள்ளது. போராட்ட களத்தில் எங்கள் கூட்டியக்கம் இணைந்தே செயல்படும். இந்த தேர்தலில் மட்டும் பிரிந்து செயல்பட போகிறோம் என திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை: மக்கள் நல கூட்டணி முறிவடைந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பல கட்ட மோதல் உள்ள நிலையில், மக்கள் நல கூட்டணியினர் போட்டியிடலாமா வேண்டாமா என தீவிர ஆலோசனைகள் நடத்தினர்.
இந்த நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று மாலை நிருபர்களிடம் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறது. இ.கம்யூ மற்றும் வி.சி.கவுக்கு மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட விருப்பம் இல்லை என்பதால் மா.கம்யூ தனியாக போட்டியிடுகிறது.
ஆர்.கே.நகரில் மக்கள் நல கூட்டணி முறிவடைந்துள்ளது. போராட்ட களத்தில் எங்கள் கூட்டியக்கம் இணைந்தே செயல்படும். இந்த தேர்தலில் மட்டும் பிரிந்து செயல்பட போகிறோம்.
ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் அதனால் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படும் என்பதை யோசித்துதான், நாங்கள் போட்டியிட வேண்டாம் என வாதிட்டோம். மா.கம்யூ அவர்கள் கருத்தில் இருந்தனர். அவர்கள் கருத்துக்கு நாங்கள் மதிப்பு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்த, விஜயகாந்த்தின் தேமுதிக, வைகோவின் மதிமுக, ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் ஆகியவை விலகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.