அலைக்கழிக்கும் சுங்கத்துறை.. ரூ.2 லட்சம் மலேசிய நிவாரண பொருள் திருச்சி விமான நிலையத்தில் தேக்கம்
திருச்சி: மலேசியாவில் இருந்து தமிழக வெள்ள நிவாரணத்திற்காக பொருட்களை எடுத்து வந்தவர்களை சுங்க அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த அடைமழை பருவமழையால் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்படைந்தன.

பல்லாயிரக்கணகான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளுக்கு பிறரின் கைகளை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களால் இயன்றதை கடலூர் சென்னை மக்களுக்கு நிவாரணமாக கொடுத்தனர். தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி மனிதநேயத்தை காட்டினர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மலேசியா நாட்டில் உள்ள 'பீப்புள் பவுண்டேசன்' எனும் தன்னார்வ அமைப்பு, மலேசிய வாழ் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பால் பவுடர், பிஸ்கட், சானிடரி நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை சேகரித்து, கடந்த 25ம் தேதி மலேசியாவில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிவாரணப்பொருட்களுக்கு, உரிய ஆவணங்கள் இல்லை என்று கடந்த 1 வாரமாக அதை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல் திருச்சி விமான நிலையத்திலேயே முடக்கி வைத்துள்ளனர் சுங்க இலாகா அதிகாரிகள்.
பீப்புள் பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த பாலாஜி இதுகுறித்து அவர் கூறுகையில், ''மலிண்டோ எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ள நிவாரண பொருட்களை இலவசமாக ஏற்றிச் செல்வதாக மலேசியாவில் அறிவித்தது. இதையடுத்து எங்கள் பீப்புள்ஸ் அமைப்பு 20 டன் மதிப்புள்ள பொருட்களை சேகரித்துள்ளோம். முதல் கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்புடைய அரிசி, நாப்கின், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, அவற்றை விடுவிக்க சுங்க அதிகாரிகள் மறுக்கிறார்கள்.
உதவி செய்ய வந்த எங்களை அலைக்கழிக்கின்றனர். விமான நிலைய அதிகாரிகள் எங்களை மோசமாக நடத்தினார்கள். பிரச்னையில்லை விடுவிக்கலாமே என மலிண்டோ விமான நிறுவனம் தெரிவித்தும், விமான நிலைய அதிகாரிகள் பொருட்களை அனுப்ப மறுக்கின்றனர்.
இவை வெள்ள நிவாரணப் பொருட்கள் என்பதற்கான ஆவணங்கள் இல்லை, மாநில அரசு அனுமதி பெறவில்லை, கலெக்டர் அனுமதியில்லை என்று சுங்க இலாகா அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தில் இவ்வளவு நெருக்கடி தேவையா என ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
நிவாரண பொருட்கள் என்ற போர்வையில், பொருட்களை வரியின்றி கடத்தி வருவோரும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே முறையான அனுமதியை கேட்கிறோம் என்கிறது சுங்க இலாகா தரப்பு.












Click it and Unblock the Notifications