கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்குத் தூண்டி கொன்ற கணவன் - கோவையில் கைது
கோவை: கோவையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.நந்தகுமார். இவரும், கோவை பழைய சக்தி சாலையைச் சேர்ந்த சாரதா என்பவரும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது சாரதா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் சரிவர வேலைக்குச் செல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சாரதா சாணிப்பவுடர் குடித்து செவ்வாய்க்கிழமையன்று மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருமணமாகி ஓர் ஆண்டுகள் மட்டுமே ஆனதால் இதுகுறித்து கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி நேற்று விசாரணை நடத்தினார். அதில், நந்தகுமார், சாரதாவை தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து, நந்தகுமாரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.