ஓடும் ரயிலில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குடிகாரன்: தர்ம அடி கொடுத்த பயணிகள்
சென்னை: ஓடும் ரயிலில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குடிகாரனை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் பயணிகள்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா (வயது 39, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த ஞாயிறு தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்குள்ள முருகன் கோவிலில் தனது 2 பெண் குழந்தைகளுக்கும் மொட்டை போட்டு விட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.
இவர்கள் சி-3 என்ற பெட்டியில் பயணம் செய்தனர். இரவு நேரத்தில் சத்யா குடும்பத்தினர் ரயிலில் அயர்ந்து தூங்கினர். அருகில் அவருடைய 2 பெண் குழந்தைகளும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விருத்தாசலம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது சத்யாவின் 5 வயது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து சத்யாவும் அதே பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் எழுந்தனர்.
அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர் அவசர, அவசரமாக கீழே இருந்து இறங்க முயன்றார். உடனே ரயில் பயணிகள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த ஆசாமி, தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் ஓடும் ரயிலிலேயே அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கோதண்டபாணி மகன் உதயகுமார் (40) என்றும் அதே பகுதியில் தனியார் அச்சகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. உதயகுமாருக்கு சொந்த ஊர் அரியலூர். அவர் அரியலூருக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்பிரசில் அரியலூரில் இருந்து ஏறியுள்ளார். ரயிலில் வைத்தே உதயகுமார் மது குடித்துள்ளார்.
பின்னர் போதை தலைக்கேறியதும் அதே பெட்டியில் பயணம் செய்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications