பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய இளைஞர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய இளைஞரை பொறிவைத்து பிடித்த உறவினர்கள், தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாமக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். வரத்தொடங்கியது. இந்த எஸ்.எம்.எஸ் தொந்தரவு பற்றி தனது குடும்பத்தாரிடம் அந்தப் பெண் தெரிவித்து உள்ளார்.

புதன்கிழமை இரவு மீண்டும் எஸ்.எம்.எஸ் வரவே, அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட அந்த பெண், குடும்பத்தார் கொடுத்த ஆலோசனையின்படி சாமர்தியமாகப் பேசி நாமக்கல் நரசிம்மசாமி கோவிலுக்கு அந்த மர்ம ஆசாமியை வரவழைத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் மர்ம ஆசாமியை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து, அவரது கைகளை கயிற்றால் கட்டிய பொதுமக்கள், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், அங்கு உடனடியாக வந்த போலீசார், அந்த ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயர் ரகு என்றும், நாமக்கல்லில் பேக்கரி ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும், அவர் முன்னுக்குபின் முரணாக பேசி வருவதால், அவரது சரியான பெயர், முகவரி கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications