குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது
குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள், வடமாநில இளைஞர்கள் என பலர் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்த மூதாட்டியை, குழந்தையை கடத்த வந்தவர் என்று சந்தேகப்பட்டு, பொதுமக்கள் தாக்கியதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தி குறித்தும் போலீஸார் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாட்ஸ் அப்பில், செய்யாறு பகுதியில் இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, அனக்காவூர் போலீஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பதும், கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிவதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் போலீஸார்,அவர் ஏன் இந்த வீடியோவை வெளியிட்டார், அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.