குடிபோதையில் மீன் வெட்டும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது
சென்னை: சென்னை அருகே குடிபோதையில் மீன் வெட்டும் கத்தியால் மகனை வெட்டிய தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகர் இளங்கோவன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாயவன் (43). இவருடைய மனைவி கண்ணம்மாள் (39) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுடைய 18 வயது மகன் ராஜியும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாயவன், தனது மகன் ராஜியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாயவன், வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியால் மகன் என்றும் பாராமல் ராஜியை வெட்டியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த ராஜி, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயவனைக் கைது செய்துள்ளனர்.