2வதும் பெண் குழ்நதையா?... மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்த செல்வம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் வி. குமாரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற 45 வயது நபர், தனது மனைவிக்கு 2வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் வேதனைப்பட்டு மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் குழந்தை பிறந்தால் வேதனைப்படும் பத்தாம்பசலித்தனம் இன்னும் சமூகத்தை வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் அரசும், சமூக அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசுகள் எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும் பெண் குழந்தைகளை வெறுக்கும் மூடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவராக செல்வம் சேர்ந்துள்ளார். அதுவும் தனது மனைவிக்கு 2வதும் பெண்ணாக பிறந்ததால், அவரை பிரசவத்திற்காக சேர்த்த மருத்துவமனை வளாகத்திலேயே அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வத்தின் மனைவி பெயர் பானுமதி. இவருக்கு 38 வயதாகிறது. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. ஆனால் நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியமே இல்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பானுமதி கர்ப்பம் தரித்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது 2வது முறையாக கர்ப்பமானார் பானுமதி. இதையடுத்து அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
அங்கு வெள்ளிக்கிழமையன்று பானுமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்து செல்வம் மனம் உடைந்து போய் விட்டாராம். மீண்டும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று புலம்பிய அவர், மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications