ராஜீவ் காந்தி நினைவிடத்தைக் கட்டிய காண்டிராக்டர் மர்ம மரணம்.. புதுக்கோட்டை லாட்ஜில்!
புதுக்கோட்டை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தைக் கட்டிய ஒப்பந்தக்காரர்களில் ஒருவர் மர்மமான முறையில் புதுக்கோட்டை லாட்ஜில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்த கணேசன் என்பவர் காலை முதல் மாலை வரை வெளியே வரவில்லை என்று விடுதி ஊழியர்கள் சென்று பார்த்த போது கதவுகள் உள்ளே தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் வந்து திறந்து பார்த்த போது அறையில் கணேசன் சடலமாக கிடந்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, காரைக்குடி சாலையில் உள்ள பச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கூடப் பிறந்தவர்கள் 11 பேர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடைய சகோதரர்கள் வெளியூர்களில் தங்கியுள்ளனர்.
கணேசன் 1990 கால கட்டத்தில் தமிழகத்தில் 5 முன்னணி ஒப்பந்தக்காரர்களில் ஒருவராக இருந்துள்ளார். முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தை ஸ்ரீபெரும்புதூரில் கட்டிய ஒப்பந்தக்காரர் இவர். காரைக்குடி சிக்ரி கட்டிடம், சென்னையில் ஒரு பிஸ்கட் நிறுவன கட்டிடம் ஆகியவற்றையும் இவர்தான் கட்டியுள்ளார். பிரபலமாக விளங்கி வந்தார். சொந்த ஊரில் இருந்து ஆந்திராவில் சென்று தங்கி செயல்பட்டு வந்தார். அவரது மகன் அமெரிக்காவில் இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வருவார். வரும் போது புதுக்கோட்டையில் லாட்ஜில் தங்குவது வழக்கம். அதே போல நேற்று முன் தினம் பச்சலூர் கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று சடலமாக கிடந்துள்ளார். அதனால் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தின் மிகப் பிரபலமான பெரிய ஒப்பந்தக்காரர் விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் உறவினர்களிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications