ஒரு தலைக் காதல் விபரீதம் - காதலித்த பெண்ணின் வீட்டிலேயே வாலிபர் தற்கொலை
ஆவடி: சென்னை ஆவடியில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி ஜீவானந்தம் நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் பாலையா. இவரது உறவினர் கார்த்திக். இவர் ஒரு லாரி டிரைவர். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரை கிராமம்.
கார்த்திக் தன்னுடைய எதிர்வீட்டு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, கார்த்திக் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவர் மறுத்த நிலையில் திடீரென்று அந்தப் பெண்ணின் வீட்டு படுக்கையறைக்கு சென்ற கார்த்திக், வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்து, ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கார்த்திக் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.