திருக்கோவிலூர் அருகே பரிதாபம்: தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி பலி!
தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்: தொண்டையில் மீன் முள் சிக்கும். ஆனால் முழு மீன் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருக்கோவிலூர் அருகே நிகழ்ந்துள்ளது.
திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் அருங்குறிக்கை. இந்த கிராமத்தில் வசிக்கும் அண்ணாமலை என்பவர் அருகிலுள்ள சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். தூண்டிலில் மீன்பிடித்தபோது ஒரு மீன் சிக்கியது. அதை எடுக்க முயன்று மீன் அவர் கையில் வரவில்லை. இதனால் வாயால் கவ்விப்பிடித்து, தூண்டில் முள்ளை எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென்று அண்ணாமலை, வாயில் கவ்விய மீனை திடீரென்று விழுங்கிவிட்டார். இதில் தொண்டையில் மீன் சிக்கி கொண்டது. இதனால் அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி சரிந்தார். இதனை கண்ட அங்கிருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொண்டையில் சிக்கிய மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றும் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.