வீட்டுக்குள் இலைகள் விழுந்ததால் மரத்தை வெட்டிய வீட்டு உரிமையாளருக்கு ரூ. 74,000 அபராதம்!
கோவை: கோவையில் சாலையில் இருந்த மரத்தின் இலைகள் தனது வீட்டுக்குள் விழுந்தது என்ற காரணத்திற்காக அந்த மரத்தை வெட்டித் தள்ளிய வீட்டு உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ. 74,000 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மரம் வெட்டுவதை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மரம் வெட்டினாலும், மாநகராட்சி கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கொடுத்து விட்டுத்தான் வெட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,65-வது வார்டில், சவுரிபாளையம் அருகிலுள்ள, கிருஷ்ணா நகர் பகுதியில், சுமார் 30-வயதுடைய ஒரு வாகை மரம் அனுமதியின்றி வெட்டப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். அதேபோல, மாநகராட்சி அதிகாரிகளும் மரம் வெட்டிய இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சுந்தரம் என்பவர்தான் இந்த மரத்தை வெட்டியதாக தெரிய வந்தது. அவரது வீட்டினுள் மரத்தின் காய்ந்த இலை, தழைகள், குச்சி மற்றும் சருகுகள் விழுவதாலும், வாகனங்களை சாலையில் நிறுத்த முடியாததாலும், மரத்தை வெட்டியது தெரியவந்தது. மேலும், மரம் வெட்டியதில், அருகிலிருந்த சாலையும் சேதமடைந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் பிரபாகரன், சுந்தரத்திற்கு ரூ. 73,955 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சாலையோரம் இருந்த பெரிய வாகை மரம் வெட்டப்பட்டு, மாநகராட்சியின் மெட்டல் ரோடு சேதமடைந்துள்ளது. மரம் வெட்டியதற்காகவும், சாலையை சேதப்படுத்தியதற்காகவும் 73 ஆயிரத்து 955 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில், மாநகராட்சி விதிகளின்படி குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.