மனைவி குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகன் - மாமியார் பலி... 6 பேர் படுகாயம்!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்களை குடும்பத்தோடு கொளுத்திய மருமகனின் வெறிக்கு மாமியார் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
கடையநல்லூர் சொக்கம்பட்டி அருகே திருவேட்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணி என்பவரை செங்கோட்டை அருகேயுள்ள வடகரை செந்தூர் பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

கணவன், மனைவி கருத்து வேறுபாட்டால் அம்மா வீட்டிற்கு திருவேட்ட நல்லூர் கிராமத்திற்கு முத்துராணி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கையில் பெட்ரோல் கேனுடன் செந்தூர்பாண்டியன் அதிகாலை மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை சந்தர்ப்பமாக கருதிய அவர் கதவின் இடைவெளி மற்றும் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீயை பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் முதல் அறையில் படுத்திருந்த அவரது மாமியார் லட்சுமி உடலில் தீப்பற்றி உடல் கருகியது.
வீடு பூட்டப்பட்டிருந்த சமயத்தில் தீ பற்றி எரிந்ததால் வீட்டுக்குள் இருந்த முத்துப்பிரியா,பூவையா, முத்துக்குமார், மாலதி மற்றும் பிரபு சுபாஸ்ரீ என்ற இரு குழந்தைகள் அலறினர். இவர்களது அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினர். இதில் மாமியார் மட்டும் பலியானார்.
தீ காயத்துடன் தப்பிய முத்துப்பிரியா, பூவையா, முத்துக்குமார், மாலதி மற்றும் பிரபு சுபாஸ்ரீ ஆகியோர் நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். சம்பவத்தை கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து சொக்கம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வடகரையை சேர்ந்த செந்தூர் பாண்டியனை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications