கந்துவட்டி புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் - காவல் நிலையத்தில் தீக்குளித்த சென்னைவாசி!
சென்னை: சென்னையில் கந்துவட்டி கொடுமை குறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் காட்டியதால் காவல் நிலைய வாளகத்திலேயே ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் கந்துவட்டி ஆட்களால் அடிக்கடி மிரட்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்தில் தம்மை மிரட்டுபவர்கள் குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசாரால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் விரக்தியடைந்த ஷாஜகான் நேற்றிரவு ஏழுகிணறு காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை காப்பாற்றிய போலீசார் , கீழப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
உடலில் 70 சதவீத தீக்காயங்கள் ஆழமாக இருப்பதால் அவரதுநிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், தீக்குளிப்பு சம்பவம் தெருவில் நடைபெற்றது என்று தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களோ காவல் நிலையத்தினுள்ளேயே நடைபெற்றது என்று கூறியுள்ளனர். காவல் துறையினரின் அலட்சியத்தால் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications