”கட்டணம் இலவசம்”- இதோ சத்தமில்லாமல் சேவை செய்யும் ஒரு ஆட்டோக்காரர்!
சென்னை: கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நீர் சூழ்ந்த தலைநகர் சென்னையில் ஆட்டோ, பேருந்துகள் என போக்குவரத்து வாகனங்களின் கட்டணம் தாறுமாறாக ஏறிக் கிடக்கின்றது.
எனினும், இந்த மழை மக்களின் மனதில் தூங்கிக் கிடந்த மனித நேயத்தினை தட்டி எழுப்பவும் தவறவில்லை. அப்படி ஒருவர்தான் சென்னையில் முகம் தெரியாத ஒரு ஆட்டோக்காரர்.
இதுதான் சமயம் என்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு மத்தியில், இவர் சற்று வித்தியாசமான "மனிதர்".

அவருடைய பெயரோ,முகமோ தெரியாதுதான். ஆனால் அவர் ஆட்டோவில் ஒட்டி வைத்துள்ள வார்த்தை அவருடைய குணத்தினை வெளிப்படையாக எடுத்துக் காட்டிவிட்டது. "மாதவரம் முதல் மூலக்கடை வரை - கட்டணம் இலவசம்" என்று வெள்ளைத் தாள் ஒன்றில் எழுதி ஒட்டி ஷேர் ஆட்டோ வசதியினை இந்த வெள்ளப் பாதிப்பு சமயத்தில் வழங்கி வருகின்றார். அதுவும் ஏழை மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில்.
தன்னுடைய ஆட்டோவின் முன்புறம் இரண்டு கடவுள் படங்களை ஒட்டியுள்ளார் இந்த அன்பான ஆட்டோக்காரர். ஆனால், இந்த வெள்ளப் பேரிடர் காலத்தில் தவிக்கும் மக்களுக்கு அவரே கடவுளாக மாறிப் போயுள்ளார் என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லைதான். ஏனெனில் மனதில் இருந்து மனித நேயத்துடன் உதவி செய்பவர்களுக்கு முகமோ, விளம்பரமோ என்றுமே தேவைப்படுவதில்லை!












Click it and Unblock the Notifications