கள்ளக்காதலனுடன் உல்லாசம்... காளீஸ்வரியை கொன்றுவிட்டு தப்பிய கருப்பசாமி
விருதுநகர்: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை போட்டுத்தள்ளிவிட்டு தலைமறைவாகிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32). இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
நேற்று கருப்பசாமி வெளியூர் சென்று விடவே தனிமையில் காளீஸ்வரி, கலைவாணனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் ஊருக்குப் போன கருப்பசாமி நள்ளிரவில் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை தட்டாமல் ஜன்னல் வழியாக பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி, கலைவாணனுடன் தனியே இருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
உடனே தனது மனைவி காளீஸ்வரி மற்றும் கலைவாணனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கலைவாணன், பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்ததும் கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து சென்று காளீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.