பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தையெனும் மிருகம் - ஓசூரில் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இரண்டு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஒரு மகளை கர்ப்பமாக்கிய பீகாரைச் சேர்ந்த தந்தை என்னும் மிருகத்தை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போபத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா. இவரது மனைவி சரஸ்வதி தேவி. இவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஓசூர் காமராஜ் நகரில் குடியேறி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள் ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இளைய மகள், நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பும் படித்து வந்தார்.
இந்நிலையில் ராஜேஷ் சர்மாவின் இரண்டு மகள்களும் கடந்த 20 ஆம் தேதி மாயமாயினர். இதுகுறித்து தாய் சரஸ்வதி தேவி கொடுத்த புகாரையடுத்து, சிப்காட் போலீசார் சிறுமியர் இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று காலை சிறுமியர் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் தந்தை ராஜேஷ்சர்மா பலாத்காரம் செய்ததால் மூத்த மகள் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், "தந்தையின் பாலியல் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினோம்" என இருவரும் கூறினர். இதையறிந்த கிருஷ்ணகிரி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கலாஜோதிமணி அனைத்து மகளிர் போலீசில் ராஜேஷ்சர்மா மீது புகார் செய்தார். போலீசார் ராஜேஷ்சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.