மதுரை அதிமுக கவுன்சிலர் படுகொலை - முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
மதுரை: மதுரையில் அதிமுக கவுன்சிலர் விஜயராகவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வபாண்டி என்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜயராகவன். மாநகராட்சி 51 ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். வட்ட செயலாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் இரவு முனிச்சாலை பகுதியில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கவுன்சிலருடன் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயராகவன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த பயங்கர கொலை தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12 ஆவது தெருவை சேர்ந்த உதயசூரியன் மகன்கள் முருகபாண்டி, கருவாயன் என்ற செல்வபாண்டி, மணிபாண்டி உள்பட 4 பேர் சேர்ந்து விஜயராகவனை கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரவுடியான செல்வபாண்டியும், இறந்து போன கவுன்சிலர் விஜயராகவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். நண்பர் செல்வபாண்டிக்கு அடிக்கடி பணம் மற்றும் பல்வேறு உதவிகளை விஜயராகவன் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பணம் கொடுப்பதை விஜயராகவன் நிறுத்தி விட்டார். இதுதவிர செல்வபாண்டியின் அண்ணன் முருகபாண்டியை போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரை ஜாமீனில் வெளியே எடுப்பதிலும் கவுன்சிலர் உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வபாண்டி தனது சகோதர்களுடன் சேர்ந்து கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பெண் தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கருவாயன் என்கிற செல்வபாண்டி நேற்று காலையில் மதுரை 1 ஆவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் கே.எஸ்.பால்பாண்டி உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க தெப்பக்குளம் போலீசார் நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இதற்காக அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். செல்வபாண்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.