குடும்பத் தகராறில் விபரீதம்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை - ஒரு குழந்தை பலி
உளுந்தூர்பேட்டை: விழுப்புரத்தில் குடும்பத் தகராறின் காரணமாக தன்னுடைய குழந்தைகளைப் தந்தையே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கிழக்கு மருதூரைச் சேர்ந்தவர் ஏர்வாயன்.
டிரைவரான இவர், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சித்ராவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ப்ரியா , வீரமுத்து என இரு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாம் திருமணம்:
இந்தநிலையில் கொணலவாடியைச் சேர்ந்த முருவாயி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ஏர்வாயன். இதில் இவர்களுக்கு விஷ்வா, வீரமணி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அடிக்கடி பிரச்சனை:
ஏர்வாயன் இரண்டு மனைவி வீடுகளிலும் தங்கி வேலை செய்து வந்தார். இதுதொடர்பாக இரு மனைவி வீடுகளிலும் அவ்வப்போது பிரச்சனை வந்துள்ளது. முதல் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ப்ரியா மற்றும் வீரமுத்துவை கொணலவாடியில் உள்ள முருவாயி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கிணற்றில் வீசிய தகப்பன்:
அங்கும் ஏதோ தகராறு ஏற்பட்டவுடன் புதன்கிழமை மாலை ப்ரியா, வீரமுத்துவை அழைத்துக்கொண்டு சென்ற ஏர்வாயன், அவர்களுக்கு வேண்டிய உணவு பண்டங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் கொணலவாடியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் அவர்களை தூக்கி வீசியுள்ளார்.
மெளனம் காத்த ஏர்வாயன்:
வீட்டிற்கு வந்த ஏர்வாயன் மெளனமாக இருந்துள்ளார். அந்த குழந்தைகளை சித்ரா வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார் என நினைத்து முருவாயி வியாழக்கிழமை காலை தனது வேலையை கவனித்து வந்தார்.
மூன்றாவது குழந்தை:
இதனிடையே முருவாயிக்கு பிறந்த வீரமணியை அழைத்துக்கொண்டு சென்ற ஏர்வாயன் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை வீசிய அதே கிணற்றில் வீசியுள்ளார். இன்று காலை வழக்கம்போல விவசாய வேலைக்கு வந்தவர்கள், கிணற்றில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எட்டி பார்த்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்:
இதில் முதல்நாள் கிணற்றில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து, மோட்டார் ஒயரை பிடித்து தொங்கிக்கொண்டு இருந்துள்ளான். அவனை காப்பாற்றிய விவசாயிகள், நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
தீயணைப்புதுறை மீட்பு:
பின்னர் அவர்கள் தீயணைப்புத்துறைக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் வீரமணியை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். கிணற்றில் இருந்து பிரியாவின் சடலம் கிடைக்கவில்லை. ஏர்வாயனும் காணவில்லை.
புதிய கோணத்தி விசாரணை:
ஏர்வாயன் தலைமறைவானாரா அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில், வழக்குப் பதிவு செய்த உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சியில் மக்கள்:
மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.