தமிழகத்தில் முதல் நாளில் 63 வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 63 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இன்று விடுமுறை நாளாகும். எனவே இன்று மனுத்தாக்கல் நடைபெறவில்லை.
நேற்று முதல் நாளின்போது மணிசங்கர அய்யர், உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், டிராபிக் ராமசாமி உள்பட 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறையில் அய்யர்
மணிசங்கர அய்யர் தனது மனைவியுடன் சென்று மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாகர்கோவிலில் உதயகுமார்
அதேபோல உதயகுமார், ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பெரும் இடைவெளிக்குப் பின்னர் இடிந்தகரை கிராமத்தை விட்டு வெளியே வந்த அவர் நேற்று தனது ஆதரவாளர்கள் புடை சூழ நாகர்கோவிலில் மனு தாக்கல் செய்தார்.

மதுரையில் பா. விக்ரமன்
மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வேட்பாளர் பா. விக்ரமன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் பா.விக்ரமன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

நோட்டரி கையெழுத்து இல்லையே
கடம்பூர் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். தேர்தல் உதவி அலுவலரிடம் மனுவை சரிபார்த்து வருமாறு அனுப்பி வை்ககப்பட்டார். அவரது மனுவில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

அபிடவிட் சரியில்லை
இதுபோல் கோவில்பட்டியைச் சேர்ந்த அகில பாரத இந்து மகாசபை சார்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்யவந்தார். அவரது அபிடவிட் விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று திருப்பி அனுப்பினர்.
நேற்ற முதல் நாளில் அரசியல் கட்சி வேட்பாளர்களை விட அதிக அளவில் சுயேச்சைகளை மனு தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications