காஷ்மீர் வன்முறையை கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் போராட்டம்!
சென்னை: காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை கண்டித்து சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. தொடர்ந்து அங்கு பதற்றநிலை நீடித்து வருகிறது. வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், ராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற பதாகைகளை வைத்திருந்தனர். காஷ்மீரில் அமைதி நிலவ மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications