நிலக்கரி சுரங்கமுறைகேட்டில் மன்மோகனுக்கு எந்த தொடர்புமில்லை: சொல்வது "நாசா"
சென்னை: நிலக்கரி சுரங்க முறைகேட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முறைகேடு தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று சி.பி.ஐ.க்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து ஜனவரி 27ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, நிலக்கரி சுரங்கமுறை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தனது கடமையை மட்டுமே செய்தார்; சுரங்க முறைகேட்டில் மன்மோகன் சிங்குக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.