மணமகனுக்கு வலிப்பு.. கட்டிய தாலியை கழற்றித் தந்துவிட்டு சென்ற மணமகள்
நாமக்கல்: திருமண மேடையில் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் மணமகனுக்கு வலிப்பு வந்ததால், மணமகள், தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். இதனால் திருமண மண்டபே அதிர்ச்சியானது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.
இவர்கள் இருவரின் திருமணத்மையும் கருமலை முருகன் கோவில் என்ற கோவிலில் நடத்த தீர்மானித்து அங்கு நேற்று காலை திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
முகூர்த்த நேரத்தில், தாலி கட்ட மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் அவருக்கு வாயில் நுரையும், ரத்தமும் வெளி வந்தது. இருந்தும் அருகில் இருந்த மணமகனின் உறவினர்கள் சேர்ந்து கையைப் பிடித்து தாலி கட்ட உதவியுள்ளனர். மாப்பிள்ளையும் தாலி கட்டி முடித்தார்.
ஆனால் மணமகள் குடும்பத்தால் அதிர்ச்சி அடைந்தனர். மணமகனுக்கு வலிப்பு நோய் உள்ளதை சொல்லாமல் மறைத்து விட்டதாக சண்டைக்கு வந்தனர். மேலும், மணமகள் கழுத்தில் கட்டப்பட்ட தாலியையும் அவர்களே அவிழ்த்து அதை மணமகன் வீட்டாரிடம் கொடுத்து விட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் மூண்டது.
போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகள் வீட்டார் தங்களது முடிவில் உறுதியாக இருந்து விட்டதால் மணமகன் வீட்டார் வாங்கிய சீர்வரிசைகளை அப்டியே திருப்பிக் கொடுத்தனர். மணமகள் வீட்டார் பின்னர் கிளம்பிச் சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications