பட்டுப்புடவையோடு தப்பிய 8வது "புருஷன்"... 7 பேரை மணந்த "மோசடி ராணி" மாரியம்மாளின் லீலைகள்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பணம் பறிப்பதற்காகவே 7 பேரை மணந்து மோசடி செய்த இளம் பெண் மாரியம்மாள் குறித்து பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகளைக் குறி வைத்து இவர் புரோக்கர்களின் உதவியுடன் சரமாரியாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாராபுரம் கோணப்பன் சாலை கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்தான் மாரியம்மாள் சிக்கியுள்ளார். முன்னதாக போலீஸில் செல்வக்குமார் அளித்த புகாரில், கடந்த 27-ந்தேதி எனது மனைவி பவித்ரா பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நான் போட்ட 15 பவுன் நகைகளுடன் மாயமான எனது மனைவியை கண்டு பிடித்து தாருங்கள் என தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் "பவித்ரா"வை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை உடுமலையில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவருடன் வாலிபர் ஒருவரும் இருந்தார். இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் "பவித்ரா"வுடன் இருந்தவர் அவரது முதல் கணவர் கருணாகரன் (38) என்பது தெரிய வந்தது.
இதனால் குழப்பமடைந்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோதுதான் "பவித்ரா"வுக்கு மொத்தம் 7 புருஷன் என்று தெரிய வந்தது. மேலும் அவரது உண்மையான பெயர் மாரியம்மாள் என்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
பவித்ரா என்கிற மாரியம்மாளின் திருமண மோசடித் திட்டம் இதுதான்:
வயதாகியும், பெண் கிடைக்காமல் திண்டாடும் ஆண்கள்தான் மாரியம்மாளின் இலக்காகும். இவர்கள் குறித்த தகவல்களை புரோக்கர்கள் மூலமாக பெற்று அந்த வாலிபர்களை அணுகுவாராம் மாரியம்மாள். அவர் சார்பில் புரோக்கர்கள்தான் மாப்பிள்ளைகளிடம் பேசுவர். நைச்சியமாக பேசி 15 பவுன் நகை, ரூ. 3 லட்சம் பணம் என மாப்பிள்ளைகளைப் போட வைத்து திருமணம் செய்துள்ளனர்.
திருமணம் நடந்த சில காலத்திலேயே அந்த நபர்களை விட்டு பிரிந்து தலைமறைவாகி விடுவார் மாரியம்மாள். தனது உண்மையான பெயரை மறைத்து பவித்ரா உள்ளிட்ட பல பெயர்களில் இவர் மோசடியில் ஈடுபட்டு 7 பேரை திருமணம் செய்துள்ளார்.
இவர் முறைப்படி தாலி கட்டிய முதல் புருஷனான கருணாகரன் மட்டுமே இவருடன் நிரந்தரமாக இருந்துள்ளார். மாரியம்மாளின் மோசடிகளுக்கு இவர் துணையாகவும் இருந்துள்ளார். இவர்களுக்கு உடந்தையாக சில புரோக்கர்களும் இருந்துள்ளனர். அவர்களுக்கும் பணம் கொடுத்து வந்துள்ளார் மாரியம்மாள்.
கடைசியாக திருமணம் செய்து கொண்ட நபர்தான் செல்வக்குமார். இவரிடம் 15 பவுன் நகை, ரூ. 3 லட்சம் பணம் பெற்று திருமணம் செய்துள்ளனர். தற்போது 42 வயதான நபர் ஒருவருடன் சமீபத்தில் மாரியம்மாளுக்கு நிச்சயம் நடத்தியுள்ளனர். அவர் ஒரு பட்டுப் புடவையை வாங்கிக் கொடுத்துள்ளார். நல்ல வேளையாக தற்போது அவர் பட்டுப் புடவைக்கான செலவோடு தப்பியுள்ளார்.