சினிமா தோற்றது போங்க.... இது கோவில்பட்டி கள்ளக் காதல் ஜோடியின் கதை
கோவில்பட்டி: திருமணமான பெண்ணுடன் கார் டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டதால் பெண்ணின் உறவினர்கள் கார் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கி பைக்கிற்கு தீ வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் மகாராஜா. கார் டிரைவரான இவருக்கும் மேலஇலந்தை குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரி என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பின்னர் இரு குடும்பத்தினரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்களது திருமணம் நின்று போனது. இதையடுத்து மகாராஜாவுக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதுபோன்று சண்முகசுந்தரிக்கும் மேலஇலந்தை குளத்தை சேர்ந்த மாரிசெல்வம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாரிலட்சுமி தாய் வீட்டுக்கு சென்று வி்ட்டார்.
இதனையடுத்து, மகாராஜா ஏற்கனவே நிச்சயம் செய்து கல்யாணம் நின்று போன சண்முகசுந்தரியுடன் பேச தொடங்கியுள்ளார். பேச்சைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.
பின்னர், திடீரென நேற்று மாலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பவத்தை தெரிந்து கொண்ட திருமணமான சண்முகசுந்தரியின் உறவினர்கள் கோபம் அடைந்தனர்.
மேலும், ஆவேசம் கொண்ட சண்முகசுந்தரியின் கணவர் மாரிசெல்வம் மற்றும் அவரது உறவினர்கள் மகாராஜாவின் வீட்டுக்கு சென்று வீட்டின் கதவை அடித்து உடைத்தனர். பின்னர் ஜன்னலுக்கும், வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கிற்கும் தீ வைத்து கொளுத்தினர்.
சம்பவம் குறித்த தகவலை அறிந்த கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.