மருது சகோதரர்களின் முதல் சுதந்திரப் போர் பிரகடனம் வெளியான நாள்... இன்று
ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் முதலாவது சுந்திர போர் பிரகடனத்தை மருது சகோதரர்கள் கிபி 1801 ஜூன் 12-ல்தான் நாவலந்தீவு அல்லது ஜம்புதீவு பிரகடனம் என்ற பெயரில் வெளியிட்டனர்.
சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 216 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்புதீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள்தான் ஜூன் 12.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் புரட்சி 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகம்தான் என வரலாறு சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் உக்கிரமாக நடைபெற்று வந்தன.

கி.பி. 1700களின் மத்தியில் தென் தமிழகத்தில் பூலித்தேவன் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 1700களின் இறுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து புரட்சியில் ஈடுபட்டு தூக்கு மேடையேறினார்.
கிபி 1800களின் தொடக்கத்தில் மருது சகோதரர்களோ ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய அளவில் மாபெரும் ஒரு தீபகற்ப கூட்டணியை உருவாக்கினர். அப்போதுதான் திருச்சி மலைக்கோட்டையிலும் ஸ்ரீரங்கம் கோவிலிலும் நாவலந்தீவு பிரகடனம் என்ற ஜம்புதீவு பிரகடனம் ஒன்றை மருது சகோதரர்கள் வெளியிட்டனர்.
இந்த நாவலந்தீவு பிரகடனத்தைத் தொடர்ந்தே மருது சகோதரர்களுடனான யுத்தத்தை ஆங்கிலேயர்கள் மும்முரமாக்கினர். நாவலந்தீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் கி.பி. 1801- ஜூன் 12.
அடிமை வாழ்வுக்கும் ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலை போராளிகளின் ஆத்மார்த்த குரலை சொல்லுகிறது அந்த நாவலந்தீவு பிரகடனம்... இதுதான் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் வெளியிடப்பட்ட முதலாவது சுதந்திரப் போருக்கான பிரகடனம். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும்.
அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...
ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்...
இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது...
இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்...
எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்...
இப்படிக்கு, மருது பாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன்,
ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி
இவ்வாறு நாவலந்தீவு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குப் பின்னரே மருது சகோதரர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆங்கிலேயர்கள் தீவிரமாக்கினர் என பதிவு செய்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்த அறிக்கை கிபி 1801-ல் ஜூன் 10-ந் தேதி வெளியிடப்பட்டது என்றும் ஜூன் 16-ந் தேதி ஆங்கிலேயர் கைப்பற்றினர் எனும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications