புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டு- சி.பி.எம். தீர்மானம்
புதுகை: புதுக்கோட்டை மாவட்டம் கடும் வறட்சியில் தத்தளித்து வருகின்ற காரணத்தினால் அதனை வறட்சி மாவட்டமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைத் துவங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக்கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், "கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் பருவமழை பொய்த்ததால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் வறட்சிக்குள்ளாகியுள்ளது. காவிரிப் பாசனப் பகுதியைத் தவிர ஏனைய இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் நிரம்பாததால் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு சாகுபடியே நடைபெறவில்லை.
இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலையை இழந்துள்ளனர். எனவே, தமிழக அரசு புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவரணப் பணிகளை துவக்கிட வேண்டும்.
கடந்த ஆறு மாதங்களாக தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் வேலை நடைபெறவில்லை. ஏற்கனவே, பருவமழை பொய்த்து விவசாயமும் பாதிக்கப்பட்டதால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமே கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளது.
எனவே, மத்திய மாநில அரசுகள் தேசிய வேலை உறுதித்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதோடு, மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.