இளங்கரங்கள் மெரீனா கடற்கரையில் ஒன்று கூடியபோது.. ஹாட்ஸ் ஆப்!
சென்னை: கேர் அன்ட் வெல்பேர் இளைஞர் குழாம் இன்று காலை மெரீனா கடற்கரையில் கூடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
சுத்தம் சோறு போடும் என்பார்கள். ஆனால் வீடுகளையே கூட சுத்தமாக வைத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. பிறகு எப்படி தெருக்களை, ஊரை, ஊரில் உள்ள பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

ஆனால் சுத்தத்தின் அருமையையும், நமது இடங்களை நாம்தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அவ்வப்போது பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணியில் இயக்கங்கள் ஈடுபடுவது வழக்கம்.

வழக்கமாக மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள்தான் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். மற்றவர்கள் ஏனோ வேடிக்கைதான் பார்த்துச் செல்கின்றனர்.
கேர் அன்ட் வெல்பேர் சார்பில் இன்று இளைஞர் குழாம் ஒன்று மெரீனாவில் கூடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. பெரும் திரளான இளைஞர்கள் திரண்டு வந்து கடற்கரையில் வீசப்பட்ட குப்பைகளை, பேப்பர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர்.

என்ன கொடுமை என்றால் ஏராளமான மது பாட்டில்கள் இந்த பணியின்போது அப்புறப்படுத்தப்பட்டன. தமிழகத்தில்தான் சிறந்த "குடிமக்கள்" இருக்கிறார்கள் என்பதை இது நிரூபிப்பதாக உள்ளது.

இது இளைஞர்களின் பணி மட்டுமல்ல என்பதை பொதுமக்கள் உணர வேண்டிய தருணம் இது. வாரந்தோறும் ஒரு நாளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் மட்டும் இதைச் செய்யாமல், தினசரி காலையில் ஒவ்வொரு நாளும் சமூகத்தின் ஒவ்வொரு தரப்பும் திரண்டு வந்து இதுபோன்ற சேவைகளில் ஈடுபடுவதன் மூலம் நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க முடியும்.

உலகின் அழகிய கடற்கரைகளில் முக்கியமானது மெரீனா. புரட்சி படைத்த தலமும் கூட. இத்தகைய இடத்தில் அசுத்தப்படுத்துவதும், அசிங்கப்படுத்துவதும் நம்மை நாமே அவமதித்துக் கொள்வது போலத்தானே.. உணருவோம்.. உருப்படியாக வைத்துக் கொள்வோம் நமது பெருமையை.. !

ஆங்.. மறந்துட்டோமே.. சுத்தப்படுத்திய அந்த இளங்கரங்களுக்கு நமது பெரிய வாழ்த்துகள்.. தொடர்ந்து பண்ணுங்கப்பா!
செய்தி: திவ்யபாலா












Click it and Unblock the Notifications