சென்னை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து- இளம்பெண் பலி- 17 பேர் படுகாயம்
சென்னை: சென்னையை அடுத்த மதுராவயல் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் 17 பேர் படுகாயமடைந்தனர்
கோயம்பேட்டில் இருந்து சேலத்துக்கு இன்று காலை 10 மணியளவில் தமிழக போக்குவரத்து கழக விரைவு பேருந்து (தடம் எண் 333) புறப்பட்டு சென்றது. பேருந்தை டிரைவர் ரங்கநாதன் ஓட்டிச் சென்றார். கண்டக்டர் ஜெய்சங்கர் உள்பட 30 பயணிகள் பயணம் செய்தனர்.
காலை 11 மணி அளவில் அந்த பேருந்து மதுரவாயல் கடந்து திருநீர்மலை பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பேருந்து உரசியதாக தெரிகிறது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ரோட்டில் விழுந்தார். அவர் மீது பேருந்து ஏறாமல் இருக்க டிரைவர் பேருந்தை திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து நிலை தடுமாறி சாலையோர இரும்பு தடுப்பு வேலியில் மோதி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. ப
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம் அடைந்தனர். பேருந்து கவிழ்ந்ததை பார்த்ததும் சாலையில் வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன் அனைவரும் மீட்பு பணியில் இறங்கினர்.
தகவலறிந்து தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டு 6 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி தாம்பரம், குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த 18 வயது இளம் பெண் பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
அவரது பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவரது பெயர் சத்திய தர்ஷினி என்பதும், திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஜெய்ராம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. இவரது முழு முகவரி தெரியவில்லை.
விபத்தில் டிரைவர் ரங்கநாதன், கண்டக்டர் ஜெய்சங்கர் உள்பட 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இன்று காலை திடீர் என பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலை தடுமாறி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் மதுரவாயல் பை-பாஸ் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.