விவசாயிகளின் தற்கொலையை தடுக்கக் கோரி சாஸ்திரிபவன் முற்றுகை.. 50க்கும் மேற்பட்டோர் கைது
விவசாயிகளின் தொடர் தற்கொலை மற்றும் மரணத்தை தடுத்து நிறுத்தக் கோரி சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலையானார்கள்.
சென்னை: விவசாயிகளின் தற்கொலை விஷயத்தில் மெத்தனமாக இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் மே 17 இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ளனர். இதனை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வில்லை என்பதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று தெரிவித்த அவர்கள், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.












Click it and Unblock the Notifications