மே தினம்: கரூரில் தொழிலாளர்கள் கோலாகல கொண்டாட்டம்
கரூர்: கரூரில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் கொடியேற்றி கொண்டாடினர்.
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி அன்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இதில் இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
மேலும், 1889ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரெட்ரிக் எங்கெல்ஸ் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை இம் மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890ம் ஆண்டு மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறை கூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக மே தினமாக கொண்டாட வழிவகுத்தது. இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் 1923ல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
அன்று முதல் இன்று வரை இந்தியாவில் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று தமிழகம் முழுக்க மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தொழிலாளர் தினமானஇன்று புலியூர் சிமெண்ட் ஆலை முன்பு திமுக கொடியை தொ.மு.ச. தலைவர் மா.கண்ணதாசன் ஏற்றி வைத்தார். மேலும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார்.
உடன் கரூர் மாவட்ட திமுக பொருப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், தொ.மு.ச. செயலாளர் பழ.அப்பாசாமி, புலியூர் பேரூர் திமுக செயலாளர் கா. அம்மையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சிதம்பரத்தில் மே தின கொண்டாட்டம்:
சிதம்பரத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றத்துடன் மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு தொழிலாளர் தினத்தை சிதம்பரம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியேற்றத்துடன் கொண்டாடியது.
இந்த நிகழ்சிக்கு கட்சியின் மூத்த தலைவர் மு.முருகவேல் தலைமை தாங்கினார். "மே நாள் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக " என தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா முழக்கங்கள் எழுப்ப சிதம்பரம் காசுக்கடைத்தெரு - நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மா.கோ.தேவராசன் கட்சிக் கொடியினை ஏற்றினார்.
முன்னதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் கு.சிவப்பிரகாசம் தொழிலாளர் நாள் குறித்து உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications