திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. கலவர வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. அடுத்து கைது?
மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் திருமாவளவனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாளவன். இவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 2வது முறையாக அவர் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார்.

இந்த தொகுதியில் தொல் திருமாவளவன் 5 லட்சத்து 5 ஆயிரத்து 84 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 4 லட்சத்து 1 ஆயிரத்து 530 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் திருமாவளவன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2003ம் ஆண்டில் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு கட்சியின் தலைவரான திருமாவளவன் தலைமையேற்று இருந்தார்.
இந்த பேரணியின்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு என்பது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் திருமாவளவன் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆர் விஜய குமாரி திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது மற்றும் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு என்பது ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமாவளவனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு திருமாவளவன் ஆளாகலாம். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவலையடைந்துள்ளனர். மேலும் திருமாவளவன் வழக்கில் அடுத்து என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications