மருத்துவ படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் 7-ஆம் தேதி வரை அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை இத்தனை ஆண்டுகளாக பிளஸ் 2 மதிப்பெண்களின் கட் ஆஃப் அடிப்படையில் நடந்து வந்தது. தற்போது நாடெங்கும் ஒரே மாதிரியான நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கொண்டு சேர்க்கை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆகியவைகளிலும் 3,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மீதமுள்ள சீட்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும்.

ஒதுக்கீடு என்ன
10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 664 இடங்களும், சிபிஎஸ்இ உள்ளிட்டவற்றில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

பல் மருத்துவம்
அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 610 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 7 சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 305 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

டிடி வேண்டும்
22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 23-ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட ரூ.500-க்கான வங்கி வரைவோலை (டிடி) கொடுக்க வேண்டும்.

8-ஆம் தேதி கடைசி நாள்
இன்று முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு 8-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விரும்பும் தமிழக மாணவர்களும், அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்திய (என்.ஆர்.ஐ.) மாணவர்களும் தனி விண்ணப்பம் பெறவேண்டும்.












Click it and Unblock the Notifications