மனசாட்சிப்படி ஸ்ரீரங்கத்தில் தமாகாவினர் வாக்களிப்பார்கள்- ஜி.கே.வாசன்
ஆரணி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஆரணிக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.

கேள்வி: வருகிற 2016 சட்டசபைத் தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைக்கும்?
பதில்: த.மா.கா. சார்பாக தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இதுவரை 32 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எங்கள் இலக்கு 50 லட்சம் உறுப்பினர்கள். அனைத்து தரப்பினருமே த.மா.கா.வை வரவேற்கிறார்கள். மத்தியில் மத நல்லிணக்க நல்லாட்சி அமைய வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயல்பட வேண்டும்.
கேள்வி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?
பதில்: எங்கள் கருத்தை ஏற்கனவே பத்திரிகை வாயிலாக தெளிவுபடுத்தி விட்டோம். த.மா.கா. உறுப்பினர்கள் உண்மை நிலை அறிந்து, அவர்களுடைய மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்.
கேள்வி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரை த.மா.கா.வில் இணைப்பீர்களா?
பதில்: காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தெரிகிறது. நாங்கள் த.மா.கா. கட்சி வலுப்பெறும் வகையில் செயல்பாடுகளை கொண்டு செல்கிறோம். மற்றொருவரின் கருத்துக்கு பதில் சொல்ல அவசியமில்லை.
கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு குறித்து...?
பதில்: மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசு செயல்பட்டால், அதை வரவேற்க வேண்டும். தற்போது பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு உள்ளது. எனவே, மக்களின் மனநிலையை புரிந்து அரசு செயல்பட வேண்டும்.
கேள்வி: இலங்கையில் புதிய அரசு அமைத்து தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பலாம் என தகவல் தெரிவித்துள்ளனரே?
பதில்: மனசாட்சிப்படி அங்கு படிப்படியாகத்தான் நிலைமைகளை தெரிந்து கொண்டு நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார் ஜி.கே.வாசன்.












Click it and Unblock the Notifications