வைகோ மீது சிங்களர்கள் தாக்க முயற்சி எதிரொலி.. சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
வைகோவை தாக்க முயன்ற சிங்களர்களை கண்டிக்கும் விதமாக சென்னையில் மதிமுகவினர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
சென்னை : ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதை கண்டித்து சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். அங்கு ஐநா உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் 3 முறைகள் பேசிய வைகோ ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்துரைத்தார். இந்த உரைக்குப் பிறகு சிங்களப் பெண் ஒருவர் உள்பட 6 பேர் வைகோவை சூழ்ந்து கொண்டு இலங்கைக்கு எதிராக எப்படி பேசலாம் என்று வைகோவை அவதூறாகப் பேசியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஈழத் தமிழர்களுக்காக பேசிய வைகோவை தாக்க முயன்ற சிங்களவர்களுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் குரல் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications