லோக்சபா தேர்தலில் ஐ.மு. கூ அரசை வீழ்த்துவோம்- மதிமுக தீர்மானம்
விருதுநகர்: லோக்சபா தேர்தலி்ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்துவோம் என்று மதிமுக தீர்மானம் போட்டுள்ளது.
விருதுநகரில் இன்று நடந்த மதிமுகவின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் ஒரு தீர்மானமாக வருகிற லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்...

காங்கிரஸ் தலைமையில் ஆன ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறித் திளைத்து இருக்கின்றது. நாட்டின் 66 ஆண்டுகால ஆட்சியில், மன்மோகன்சிங் அரசு காலத்தில் நடந்த இமாலய ஊழல்களால் இந்திய நாடே தலைகுனிய வேண்டிய நிலை உலக அரங்கில் உருவாகி உள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் ரூ 1.86 இலட்சம் கோடி, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த ஊழல் வழக்குகளை விசாரித்து வருகிறது.

மேலும் மராட்டியத்தில் இராணுவத்தினருக்கு வீடு கட்டும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் ரூ 3,000 கோடி ஊழல், ரூ 70,000 ஆயிரம் கோடி செலவில் டெல்லியில் நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ரூ 3,600 கோடி செலவில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல், இராணுவத்திற்கு டிரக் வாகனங்கள் வாங்கியதில் ஊழல் என, அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது என்றும், மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஊழல் காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றுவதை இலக்காக கொண்டு வியூகம் வகுப்பது என்றும் இந்த மாநாடு பிரகடனம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications