கூட்டணி குறித்து ஆலோசனை? ம.தி.மு.க. உயர்நிலைக் குழு ஜூன் 1-ல் கூடுகிறது!
சென்னை: மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ஜூன் 1-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், சட்டசபை பொதுத்தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் ஜூன் 1-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் நிலைப்பாடு, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.