சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்: வைகோ நம்பிக்கை
சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை மண்டல ம.தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வைகோ பேசியது: மக்கள் நலக் கூட்டணிதான் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும். மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம்.
அதி.மு.க. ஊழலால் தமிழகத்தை பாழ்படுத்திவிட்டது. தி.மு.க. ஊழலால் தமிழக பொது வாழ்வை நாசமாக்கி விட்டது. வரும் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இரு கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க ஜனவரி 26-ந் தேதி மதுரையில் திறந்தவெளி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் சீதாராம் யெச்சூரி, சுதாகர்ரெட்டி, கம்யூனிஸ்டு ராஜா, திருமாவளவன் உள்பட 4 கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொள்ள இருக்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதில் பிரதான அங்கம் வகித்தது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சியிலும் இருந்தது. 2011-ல் மத்திய அமைச்சரவையிலும் இருந்தது. அப்போது தடுக்க தவறி விட்டு தற்போது ஜல்லிகட்டுக்காக போராட்டம் நடத்துவது என்பது எல்லோரின் காதிலும் பூ சுற்றும் வேலை. இவ்வாறு வைகோ கூறினார்.