ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: மதிமுக புறக்கணிப்பு- வைகோ! யாருக்கும் ஆதரவும் இல்லை!!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தமது கட்சி புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளருக்கும் மதிமுக ஆதரவு அளிக்காது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, பாஜக, மேட் பேரவை தீபா, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இன்று கூடி ஆலோசித்தது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது; அங்கு எந்த கட்சியின் வேட்பாளருக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமாக ஆகியவற்றுடன் வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மக்கள் நலக் கூட்டணி தேர்தலை சந்தித்தது. சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications