சீரழியும் பொருளாதார இறையாண்மையை மீட்போம் - மதிமுக
விருதுநகர்: மத்திய காங்கிரஸ் அரசினால் பாழ்படுத்தப்பட்டுவரும் பொருளாதார இறையாண்மையை மீட்டு எடுக்க வேண்டும் என்று மதிமுக கூறியுள்ளது.
இதுதொடர்பாக விருதுநரில் நடந்த மாநாட்டில் அக்கட்சி இயற்றிய தீர்மானம்...
மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், இந்தியப் பொருளாதாரம் பெரும் அபாயகரமான கட்டத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது. 1991 இல் காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகள், உலகமயம் - தனியார்மயம் - தாராளமயம், 22 ஆண்டுகளில் இந்திய நாட்டை திவால் ஆகும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது.

சமச்சீரான வளர்ச்சி இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நாட்டின் 80 சதவீதமக்கள் தாங்கொணாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். உற்பத்தி தொழிற்துறை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு உள்நாட்டு தொழில்கள் முற்றிலும் சிதைந்துவிட்டன.
நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கியதால், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்து இருக்கின்றது.
ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ 70 ஆக வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேளாண்மைத் தொழில் நலிவு அடைந்து, இதுவரை 2 1/2 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இதை நம்பி உள்ள கோடிக்கணக்கான சிறுவணிகக் குடும்பங்களின் வாழ்வு பறிக்கப்படுகிறது.
தொலைபேசித்துறை, மின்சார உற்பத்தித்துறை விமான போக்குவரத்து, இராணுவத்தளவாட உற்பத்தி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து, நாட்டின் பொருளாதார இறைமையை அந்நிய நிறுவனங்களிடம், காங்கிரஸ் கூட்டணி அரசு அடகுவைத்து விட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் ‘பொருளாதார சீர்திருத்தங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பப்பெற மாட்டாது; இன்னும் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்' என்று, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இன்றி கருத்துத் தெரிவித்து உள்ளார்.
இந்திய நாட்டின் பொருளாதார இறையாண்மையை மீட்டு எடுக்கவும், தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகளைச் செயற்படுத்தவும், மத்தியில் மாற்று அரசு ஒன்றை அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று மறுமலர்ச்சி தி.மு.க.கருதுவதுடன் அதற்காக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மக்களை தயார்படுத்தும் பணியில் முழுவீச்சில் இறங்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications